Friday, March 21, 2014

படிப்பு வரமருளும் பரிமுகன்


தேசிகரால், இந்தத் தலத்தில் மிகவும் விரும்பி வழிபடப்பட்டவர், ஹயக்ரீவர்.

தேவநாதன் கோயிலுக்கு வலது பக்கம் ஒரு மலைமீது கோயில் கொண்டிருக்கிறார், இந்தப் பரிமுகன்.

இவரது மந்திரத்தை, கருட பகவான் தேசிகருக்கு உபதேசித்தார். எப்போதும் அந்த மந்திரத்தை உச்சரித்த
படியே இருந்த இவருக்கு ஹயக்ரீவர் காட்சி தந்ததோடு, அனைத்து வேத சாஸ்திரங்களையும் இந்த ஔஷதகிரியிலேயே கற்பித்தார்.

இவரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவ மூர்த்தியை இன்றும் தேவநாதன் கோயிலில் தனி சந்நதியில் காணலாம்.

ஒருமுறை, இவரை தரிசனம் செய்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கிய தேசிகர், கீழே மூலவரான தேவநாதனை வழிபடாமல் பெண்ணை ஆற்றங்கரை நோக்கிச் சென்றார்.

அப்போது, தன்னை அவர் தரிசிக்காவிட்டாலும் தான் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்று திருவுளங்கொண்ட தேவநாதன் இவருக்கு முன் போய் நின்று காட்சி கொடுத்திருக்கிறார்.

அந்த அளவுக்குத் தன் கடமையில் பேரார்வம் கொண்டிருந்தவர் தேசிகர்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளன்று தேசிகனை, ஹயக்ரீவர் சந்நதிக்கு எழுந்தருளச் செய்து சிறப்பிக்கிறார்கள்.

இந்தத் திருக்கோயிலில் பிரம்மோத்சவம் நடைபெறும் பத்து நாட்களிலும் தேசிகருக்கும் பெருமாளைப் போலவே விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவருடைய உற்சவ விக்ரகத்துக்கு ரத்னாங்கி அணிவித்து அழகு சேர்த்து மகிழ்கிறார்கள்.

தேவநாதன் கோயிலில் ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன், அனுமனுடன் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார்.

இந்த ராமரின் தோற்றம் சற்றே வித்தியாசமானது. இடது கரத்தால் வில்லினையும் வலது கரத்தால் அம்பினையும் பற்றியிருக்கிறார்.

பொதுவாக வலது கரத்திலேயே வில்லைப் பற்றியிருக்கும் இவர் இங்கு இவ்வாறு காட்சி தரும் காரணம் என்ன?

எல்லாம் பக்தர்கள் நலம் கருதிதான். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உடனே வலது கையிலிருக்கும் அம்பை இடது கரத்திலுள்ள வில்லில் பூட்டி, அந்த ஆபத்தை உடனே குத்தி எறிந்துவிடும் பரிவுதான் காரணம்.

இளவல் லட்சுமணனும் அவ்வாறே காட்சியளிக்கிறார். வடலூர் ராமலிங்க அடிகள், ‘வெவ்வினை தீர்த்தருள்கின்ற ராமா’ என்று இவரைப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்.

இங்கு தரிசனமளிக்கும் லட்சுமி நரசிம்மரும் வித்தியாசமானவரே.

இவர் மஹாலக்ஷ்மியைத் தன் வலது பாகத்தில் ஏந்தியபடி சேவை சாதிக்கிறார். தன்னுடைய இந்த அபூர்வ திருக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா வளங்களையும் அள்ளித் தருகிறார், இவர்.

இவர்கள் தவிர, ராஜகோபாலன், வேணு கோபாலன், ரங்கநாதர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் அமைந்து, கோயிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடமிருந்து ‘என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்ட போதிலும் முக்தியாகிய பேரின்பத்தைத் தன்னால் அடைய முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு மேலிட்டது.

அவர் இத்தலத்தின் அருகே சௌகந்திக வனம் என்ற காட்டை அடைந்து தனக்குக் கேட்ட அசரீரி வாக்குப்படி தவம் மேற்கொண்டார்.

அந்த தவத்தின் பயனாக தாமரை மலரைத் தன் இருப்பிடமாகக் கொண்ட மூன்று வயதுப் பெண் குழந்தையை அவர் கண்டார்.

அந்தக் குழந்தை, அருகிலிருந்த கடல் அலைகளைப் பார்த்து மகிழ்ந்ததால், அதற்கு தரங்காநந்தினி (தரங்கம் என்றால் அலை; ஆனந்தினி என்றால் மகிழக் கூடியவள்) என்றுப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.

அவள் திருமணப் பருவத்தை எட்டியபோது, ஒரு தந்தைக்குரிய கடமையினை நிறைவேற்ற வேண்டுமே என்று பொறுப்பால் வேதனை கொண்டார் மார்க்கண்டேயர்.

மீண்டும் அசரீரி. மீண்டும் பெருமாள் வழிபாடு.

எம்பெருமான் அவருக்குப் பிரத்யட்சமாக, தன் மகளை அவர் ஏற்க வேண்டும் என்றும் அந்தத் தலத்திலேயே அவர் நிலை கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், மார்க்கண்டேயர்.

உடனே ஆதிசேஷன், பெருமாள் தங்குவதற்கு வசதியாக இங்கே ஒரு நகரத்தையே சிருஷ்டித்தார் என்கிறது, புராணம்.

இந்த நகரை பெருமாளுக்கு அர்ப்பணித்ததால் இது திருஅசீந்திரபுரம் என்று வழங்கப்பட்டது.

தேவநாதப் பெருமாளுக்கு, வருடம் பூராவும் ஒவ்வொரு நாளும் உற்சவத் திருநாளே!.

குறிப்பாக புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.

தினமுமே பக்தர்கள் பெருமாள் சந்நதிக்கு முன் திருமண பந்தத்தில் ஒன்றுபடுகிறார்கள்.

பக்கத்து மலைமீது 74 படிகளை ஏறிச் சென்றால் ஹயக்ரீவரின் திவ்ய தரிசனம் கிட்டுகிறது.

இந்த 74 படிகளும் ராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் படிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் படிபூஜை நடத்தப்படுகிறது.

மலைமீது நிலவும் ஏகாந்தமும் மூலிகை மணம் சுமந்துவரும் மென்காற்றும் நம் உள்ளத்தையும் உடலையும் வருடிச் செல்கிறது.

இந்த மலையை ஔஷத கிரி என்கிறார்கள்.

அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு, போரில் மூர்ச்சித்திருந்த லட்சுமணனைக் காப்பதற்காக வந்தபோது, அந்த மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மலை என்கிறது புராணம்.

அதோடு, சஞ்சீவி மலையில் அனுமனுக்கு சஞ்சீவி மூலிகையை அடையாளம் காட்ட ஹயக்ரீவர் உதவினார் என்றும் புராணம் விவரிக்கிறது.

அனுமன் எடுத்துச் சென்றபோது கீழே விழுந்த மலையின் ஒரு பகுதியோடு ஹயக்ரீவரும் சேர்ந்து இங்கே தரையிறங்கினார்.



முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண
முனிவரோடு தானவரும் திசைப்ப வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய நம்பரமன்

என்று ஹயக்ரீவரைப் பாடித் தொழுதிருக்கிறார், திருமங்கையாழ்வார்.

இந்தப் பரிமுகன், கல்வியும் ஞானமும் அருளவல்லவர்.

பரீட்சைக்கு ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வு எழுதுபவர்களும் இவரது ஆசி பெற்றுச் சென்று வெற்றிவாகை சூடுகிறார்கள்.

பிறவியிலேயோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் காரணத்தாலோ பேச்சிழந்த குழந்தைகள் இந்த ஹயக்ரீவர் சந்நதியில் கால் பதித்தாலே உடனடி நிவாரணம் பெறுகிறார்கள். கிரகங்கள் அல்லது வேறுவகை தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.

இந்த ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக
ஒரு ஸ்லோகம் இருக்கிறது:

ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக் ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

அதாவது, ஞானமயமாகத் திகழ்கிறார் ஹயக்ரீவர். கலக்கமற்ற ஸ்படிகம் போல ஒளிர்பவர்.

இவரே அனைத்து வித்தைகளுக்கும் ஆதாரமானவர். இவரை உபாசித்தால் கல்வி, ஞானத்தில் மேம்பட முடியும் என்று பொருள்.

திருவஹீந்திரபுரம் சென்று தேவநாதனையும் ஹயக்ரீவரையும் தரிசிக்கும்வரை கீழ்க்காணும் தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

சித்தேமே ரமதாம் அஹீந்த்ர நகராவாஸீ துரங்கோந் முகா நந்த:
ஸ்ரீ ஸகதைவ நாயக ஹரி: தேவேந்த்ர ஸாக்ஷாத் க்ருத:
பூர்வாம் போதி முக: ககேந்த்ர ஸரிதஸ் தீராச்ரயஸ் ஸர்வதா,
ச்லாக்யே சந்த்ர விநிர் மிதேச பகவாந் திஷ்டந் விமாநோத்தமே

பொதுப் பொருள்:

அஹீந்த்ர நகர் எனும் திருவஹீந்திரபுர திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் தெய்வநாயகன் என்ற தேவநாதப் பெருமாளே நமஸ்காரம்.

வைகுண்டநாயகித் தாயாருடன், சந்திரனால் அமைக்கப்பட்ட இந்திர விமான நிழலில், கருட நதி தீரத்தில், கிழக்கு நோக்கி நின்ற திருக்
கோலத்தில் காட்சி தரும் எம்பெருமானே நமஸ்காரம்.

தேவேந்திரனுக்குக் காட்சியளித்த பெருமாளே, என் சித்தத்தையும் இன்புறச் செய்வீர்களாக.

கடலூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவஹீந்திரபுரம் சென்னைகடலூர் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவும் செல்லலாம்.

இந்தக் கோயில் பற்றிய சில அரிய தகவல்கள் தந்து உதவிய பெரியவர் நீலமேக பட்டாச்சார்யார். இவரை 9443444778 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் பெறலாம்.


 Thanks to Indra Srinivasan for this article.

1 comments: