Wednesday, April 2, 2014

விஸ்வாமித்திரர்



ராமரின் திருமணத்திற்கு காரணமான விஸ்வாமித்திரர்!

தேவர் உலகம் அன்று அரண்டு போய் கிடந்தது. தேவர் தலைவன் இந்திரன், முகத்தில் வேதனை ரேகைகள் பரவிக்கிடந்தன. அவன் சக தேவர்களை அழைத்தான்.

தேவர்களே! பூமியில் ஒரு மானிடன், பெரும் தவம் செய்து, தேவர்களுக்கெல்லாம் தேவனாக வேண்டும், என சிவபெருமானை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான்.

அவனது தவத்தின் உக்கிரம் தாங்காமல் சிவலோகத்தின் ஒரு பகுதியே தீ ஜூவாலையால் கரைந்து கொண்டிருக்கிறது.

அது தேவலோகத்தை பற்ற வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள், அவனது தவத்தை கலைக்காவிட்டால், நமக்கு இங்கு இடமிருக்காது.

சிவபெருமான் அவன் கேட்கும் வரத்தை கொடுத்து விடுவார். அவன் யார் என பார்த்து வந்து, என்னிடம் உடனே தகவல் சொல்லுங்கள், என்றான்.

அங்கேயிருந்த மூத்த தேவர் ஒருவர், மகாபிரபு! அவனது வரலாற்றை விபரமாகச் சொல்கிறேன், கேளுங்கள். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பூமியில் மானிட அவதாரம் எடுக்கப் போகிறார்.

அவரது தேவியும் ஜானகி என்ற பெயரில் பூவுலகில் அவதரிக்கிறார். அவர்களை இணைத்து வைக்க, இந்த மானிடனை தவ வலிமை கொண்டவனாக பரமாத்மா மாற்றிக் கொண்டிருக்கிறார். இவன் வைராக்கிய உள்ளமுடையவன்.

வைராக்கியம் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள், என்றவர் சற்று நிறுத்தியவராய் மீண்டும் அவனது வரலாற்றை தொடர்ந்தார்.

தவம் செய்து கொண்டிருக்கும் இவன் ஒரு நாட்டின் அரசன். ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.

அங்கே தவரிஷி வசிஷ்டர், பர்ணசாலை அமைத்து தங்கி இருந்தார். அவரை வணங்கிய இவனை, மன்னன் என்ற முறையில் வசிஷ்டர் வரவேற்றார்.

தன் பர்ணசாலையில் படை பட்டாளத்துடன் தங்கி, ஏழு நாட்கள் விருந்தினராக தங்கும்படி வேண்டினார். அந்த இடம் மன்னனை மிகவும் கவர்ந்து விட்டது. அவனும் அங்கே ஒருவாரம் தங்கினான்.

தான் தங்கியிருந்த நாட்களில் பெண்ணின் முகமும், பசுவின் உடலும் கொண்ட அதிசய மிருகத்தை பார்த்தான்.

அந்த பசு பால் சொரிந்தது. அந்த பால், பதார்த்தங்களாகவும், அறுசுவை உணவாகவும் மாறியது. சிங்கமும், புலியும், கரடியும், மான்களுமாய் பார்த்து பழகிய அந்த அரசனுக்கு, இந்த வித்தியாசமான மிருகம் பிரமிப்பை ஊட்டியது.

இந்த மிருகத்தை ஊருக்கு கொண்டு சென்றால் நாட்டு மக்கள் நினைத்ததை எல்லாம் கொடுக்கலாம். பிற நாடுகளுக்கும் அனுப்பலாம்.

உலகமே பசிப்பிணியின்றி இருக்கும் எனக் கருதினான், என்ற முனிவரிடம், இந்திரன் ஆவல் மேலிட அப்புறம் என்ன ஆயிற்று? என்றான். முனிவர் தொடர்ந்தார்.

இந்திரனே! இவனது சிறப்பை இன்னும் கேள். காமதேனு மீது ஆசைப்பட்ட அந்த அரசன் வசிஷ்டரிடம், அந்த அதிசய மிருகத்தை தன்னிடம் தந்து விடும்படி வேண்டினான்.

வசிஷ்டர் சிரித்தவராய், மன்னா, இது என்ன சாதாரண பசுவா?

அனைவருக்கும் நீ நினைத்த போதெல்லாம் சோறூட்ட. இது தெய்வப்பசு. பாற்கடலை தேவர்கள் கடைந்த போது உருவானது.

இதற்கு சொந்தக்காரர்கள் தேவர்கள். அவர்கள் என்னிடம் இதை தந்து வைத்திருக்கிறார்கள்.

இருப்பினும் அது உன்னோடு வர விரும்பினால் தாராளமாக அழைத்துச் செல்லலாம், என்றார். அதன்படி மன்னன் காமதேனுவை அழைத்தான், என்று முனிவர் சொல்லிக் கொண்டிருக்கவும், ஓடிவந்தது காமதேனு.

இந்திரன் காமதேனுவிடம், காமதேனுவே! உன்னைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். நீயே வந்து விட்டாய், என்றதும் அனைத்தும் நான் அறிவேன் என்ற காமதேனு, இனி நான் அன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து உங்களிடம் சொல்கிறேன், என்றது. அனைவரும் ஆவல் மேலிட்டவர்களாய், காமதேனு சொல்வதை கேட்க தயாராயினர்.

காமதேனு தனக்கு நேர்ந்த அனுபவத்தை எடுத்துக் கூற ஆரம்பித்தது. அந்த மன்னன் என்னிடம் வந்தான். என்னை தன்னோடு வரும்படி அழைத்தான்.

நான் வசிஷ்டரிடம் சென்று, நீங்கள் என்னை அவனுடன் போகச் சொல்லி இருக்கிறீர்களா? என்றேன். வசிஷ்டர் அப்படி ஏதும் சொல்லவில்லை என்றார்.

உடனே நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன். அவனுக்கு கோபம் வந்து விட்டது.

என் காட்டுக்குள் வசிக்கும் மிருகமான நீ, எனக்கே சொந்தம் எனச்சொல்லி என்னை தன் படைகளைக் கொண்டு கயிறால் கட்டிப் போட்டான், என்றதும், ஐயையோ! நீ எப்படி அந்த அரசனிடமிருந்து தப்பித்தாய், என்றனர் கூடியிருந்த தேவர்கள்.
அதை ஏன் கேட்கிறீர்கள்? நான் அவர்கள் கட்டிய கயிறை அவிழ்த்து, அவர்களை முட்டித் தள்ளினேன்.

அவர்கள் என்னை விடவில்லை. பின்பு என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அந்த மன்னனுடன் வந்த படையினரை கொன்று விட்டேன்.

அந்த அரசன் அதைக் கண்டு மிரண்டு போய் விட்டான். நான் தெய்வப்பசு என்பதை அவன் உணரவில்லை.

பின்பு கோபமாக அவன் போய் விட்டான், என்றது. அதன்பிறகு நடந்ததை மூத்ததேவர் மீண்டும் தொடர்ந்தார். காமதேனு இப்படி செய்ததும், இந்த பசுவை அடைவது சாதாரணமானதல்ல என்பதை அரசன் உணர்ந்தான்.

அரச வாழ்வை விட முனிவராக இருப்பதே சகல உலகங்களையும் அடக்க சிறந்த வழி என்பதை தெரிந்து கொண்டான். அரச பதவியைத் துறந்து விட்டு, தவத்தில் ஈடுபட்டான்.

ஆண்டாண்டு காலமாக தவம் செய்த அவன், இப்போது சிவபெருமானையே பார்க்கும் வல்லமையை பெற்று விட்டான், என்று முடித்தார்.

இந்திரன், அந்த அரசனை சந்திக்க புறப்பட்டான்.

அந்த அரசன் நீண்ட நாட்களாக செய்த தவத்தின் வலிமையால் மிகப் பெரிய ஜடாமுடியை பெற்றிருந்தான்.

அவனது தவத்தை கலைக்காவிட்டால், தன் பதவிக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டான்.

தன் மனதில் தேவலோக பூங்கொடி, திலோத்துமையை நினைத்தான். அவள் இந்திரன் முன்பு வந்து பணிந்து நின்றாள். அந்த அரசனின் தவத்தை கலைக்க, அவளை முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டான்.

தேவேந்திரனின் கட்டளையை ஏற்ற அவள், முனிவர் முன்பு நின்று நடனமாடினாள்.

அரசன் தவம் கலைந்தான். தன் முன்பு நின்ற பேரழகு பெட்டகத்தை பார்த்து, மோன நிலையிலிருந்து மோக நிலைக்கு அவன் மனம் தாவியது.

தவத்தின் வலிமை அழிந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே தன் பல்லாண்டு கால தவம் அழிந்ததை எண்ணி ஏங்கினான்.

இருப்பினும் அவன் செய்த தவம் வீண் போகவில்லை. அவன் அடுத்த ஜென்மத்தில் விஸ்வாமித்திரன் என்னும் பெரும் முனிவராக மாறினான்.

கிருஷ்ண பரமாத்மா ராமனாக பூமியில் அவதரித்ததும், ராமனை ஜனகராஜாவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, சீதையை மணம் முடிக்க ஏற்பாடு செய்தவர் இந்த விஸ்வாமித்திரர்.

செல்லும் வழியில் ராமனின் பாதம் பட்டு, கல்லாக இருந்த அகலிகை சாப விமோசனம் பெறவும் காரணமாக அமைந்தார் இந்த மாமுனிவர்.
 
Thanks to Indra Srinivasan

0 comments:

Post a Comment