Friday, March 21, 2014

சின்னக்கண்ணன் சிரிக்கிறான்





ரங்கநாதன் ஆடம்பரமாக வாழ்ந்தாலும், பாண்டுரங்கனின் பக்தராக இருந்தார்.

வாசனைத் திரவியம் ஏற்றுமதி செய்யும் வியாபாரம் நடத்தி வந்தார்.

நீதி, நேர்மை, நியாயம் இவை அனைத்தும் அவரின் இயல்புகள். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் பாண்டுரங்கனின் விருப்பம் என்பது அவரின் ஆழமான நம்பிக்கை.

அவருக்கு மூன்றுமே பெண் குழந்தைகள். தங்களின் செல்வத்தை ஆள, ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்ற மனக்குறை அவரின் மனைவிக்கு வருவதுண்டு.

ரங்கநாதனோ, ""கவலைப்படாதே! பாண்டுரங்கனின் விருப்பம் எதுவோ அது கிடைக்கும்,'' என்று சமாதானம் சொல்வார். முதல் இரு பெண்களும் பணக்காரர்களுக்குரிய ஆடம்பரத்துடன் வளர்ந்தார்கள்.

மூன்றாவது மகள் யசோதா தந்தையைப் போல, பக்தியும் அடக்கமும் கொண்டவளாக இருந்தாள்.

காலம் ஓடியது. மூன்று மகள்களும் திருமண வயதை அடைந்தனர். மூத்த பெண்கள் இருவருக்கும் வசதி மிக்க இடத்தில் மணவாழ்வு அமைந்தது. யசோதா மட்டும் வீட்டில் இருந்தாள். விதி யாரை விட்டது?

அவர்கள் வாழ்வில் பாண்டுரங்கன்
திருவிளையாடல் நடத்த திருவுள்ளம் கொண்டான்.

அவருடைய உள்ளத்தை யாரால் அறிய முடியும்? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் அதிகரித்தது.

சொத்துக்களை விற்று கடனை அடைத்தார். ஒரு கட்டத்தில், குடியிருக்கும் வீட்டைத் தவிர எல்லாம் காணாமல் போனது. அதையும் விற்கும் கட்டாயத்திற்கு ஆளானார்.

பல தலைமுறையாக வாழ்ந்த ஆடம்பரமான மாளிகை அது. முன்னோர் வாழ்ந்த அந்த வீட்டையும் விற்கத் துணிந்து விட்டார்.

கூடத்தின் நடுவே நாலடி உயர மேடையில், பஞ்சலோக விக்ரஹமாக இடுப்பில் கையை ஊன்றியபடி பாண்டுரங்கனும், ரகுமாயியும் நின்று கொண்டிருந்தனர்.

அன்றாடம் பூஜிக்கும் பாண்டுரங்கனைக் கண்டதும், ""பாண்டு ரங்கா! நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இந்த கதி?'' என்று சொல்லி கண்ணீர் விட்டார்.

மந்தகாசப் புன்னகை தவழ, பாண்டுரங்கன் அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஒரு முடிவுக்கு வந்தவராக, ""யசோதா!யசோதா!'' எனக் கூவி அழைத்தார்.

""என்னப்பா கூப்பிட்டீங்களா? '' என அவளும் தன் அறையிலிருந்து ஓடி வந்தாள்.

""வீட்டை விற்கும் நேரம் வந்துவிட்டது. நமக்கேத்த மாதிரி எளிய வீட்டில் குடியேறும் முடிவுக்கு வந்து விட்டேன். இந்த விக்ரஹத்தை நம்மோடு எடுத்துச் செல்வது தான் சரி,'' என்று சொல்லி ரங்கநாதன் சிலையைத் தூக்க முயன்றார்.

யசோதாவும் அவருடன் சேர்ந்து கொண்டு சிலையைத் தூக்க கை கொடுத்தாள். ஆனால், அந்தச்சிலையை அசைக்க முடியவில்லை. இருவரும் விடாமல் முயற்சித்தனர்.

பீடத்தோடு பொருந்தி நின்ற சிலை,"பட்' என்று விடுபட்டது.
மெதுவாக, சிலையை கீழே இறக்கி விட்டு பார்த்த இருவரும் சிலையாகிப் போனார்கள். அந்த பீடத்தின் அடியில் "தங்கக்கட்டிகள்' மின்னிக் கொண்டிருந்தன.

அதில் ஒரு செப்பேடு ஒன்றிருந்தது. அதில், ""எனது பரம்பரையில் வரும் வாரிசுகளுக்கு இந்த தங்கக்கட்டிகள் சொந்தமானது. பாண்டுரங்கனின் அருளால் அவர்களின் வாழ்வு நலம் பெறும்.. இப்படிக்கு விஷ்ணுவர்த்தன்'' என்று குறிப்பிட்டிருந்தது.

வாயடைத்துப் போன ரங்கநாதன், நிமிர்ந்து பாண்டுரங்கனைப் பார்த்தார். அப்போதும், சின்னக்கண்ணனான பாண்டுரங்கன் சிரித்தபடியே நின்று கொண்டிருந்தான்.


thanks to Indra Srinivasan for this article.

0 comments:

Post a Comment