Monday, July 7, 2014

அங்கதன்





சகலகலா வல்லவன் அங்கதன்: ராமரின் பட்டாபிஷேகக் காட்சியை விவரிக்கும்போது கம்பன், அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த... என்று அங்கதனைச் சிறப்பித்துப் பாடுகிறார்.
ராம -ராவணப் போரில் அனுமனுக்கு இணையாக ராமனுக்குத் தோள் கொடுத்து உறுதுணையாக இருந்தவன், அங்கதன். கும்பகர்ணனுடன் போரிட்டு வென்றான்; மகாபார்சுவனைக் கொன்றான்.
ராமகதையில் வரும் பெரும் பராக்கிரமசாலிகளுள் ஒருவனான இந்த அங்கதன் யார்? இந்திரனுக்கும் அரணிக்கும் மகனாகப் பிறந்தவன் வாலி. மகா பலசாலி. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? வாலிக்குப் பிறந்த சூரப்புலிதான் அங்கதன்.
வாலி பலசாலி என்றால் அவன் மனைவி தாரையோ சிறந்த புத்திக்கூர்மை உள்ளவள். தந்தையின் வலிவையும் தாயின் அறிவையும் ஒருங்கே பெற்றிருந்தான் அங்கதன்.
முரட்டுத் தனமற்ற வீரமும் கோழைத் தனமற்ற விவேகமும் கொண்டிருந்த அவன், பேரழகனாகவும் விளங்கினான். செயலாற்றலில் நுணுக்கம் எனப்படும் யுக்திமுறைகள் அத்தனையும் அவனுக்கு அத்துப்படி!
சுக்ரீவன், வாலியின் சகோதரன். சுக்ரீவனை வஞ்சித்து, அவனை வலுக்கட்டாயமாக சண்டைக்கும் அழைத்தான் வாலி.
நேர்மையற்ற வாலியை சுக்ரீவன் எதிர்க்கத் துணிந்த போது, அவனுக்குத் துணை நின்றார் ராமன். கிஷ்கிந்தையில் வாலி - சுக்ரீவன் மற்போர் நடந்தபோது, ராமன் மறைந்திருந்து தாக்கிய அம்பால் தாக்குண்டு வீழ்ந்தான், வாலி.
உயிர் துறக்கும் தறுவாயில் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் காண விரும்பிய வாலி, தன் மகன் அங்கதனை அழைத்தான். அவனுக்கு நல்லுரைகள் வழங்கினான்.
என் சகோதரன் சுக்ரீவனுக்கு நான் பாவம் செய்துவிட்டேன். அதற்குப் பரிகாரமாக அங்கதா, நீ எப்போதும் சுக்ரீவனுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். அவனது எதிரிகள் உனக்கும் எதிரிகளே! யாரிடமும் நீ அளவுக்கு அதிகமாக ஒட்டி உறவாடிப் பழகவும் வேண்டாம்.
யாரையும் வெறுத்து ஒதுக்கவும் வேண்டாம் என்று மகனுக்கு அறிவுறுத்தினான், வாலி. தந்தையின் வாக்குப்படியே வாழ்ந்த அங்கதன், வாலிக்குப் பின் கிஷ்கிந்தையின் இளவரசனானான்.
சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க சுக்ரீவன் தன் படைவீரர்களை நாலா திசைக்கும் அனுப்பினான். அப்போது அங்கதன் அனுமனோடு தென்திசை நோக்கிச் சென்றான்.
இடையூறான சந்தர்ப்பங்களிலும் அங்கதன் விடாமுயற்சியோடு முனைவதைக் கண்டு அனுமனே வியந்து போனான்.
அங்கதனின் குணவிசேஷங்கள் அவனுக்கு ஆச்சரியமளித்தன. ஞானத்தின் எட்டு லட்சணங்கள் என்று கூறப்படுவது என்னென்ன?
பிறர் சொல்வதை உடனே கிரகிப்பது, அந்த விஷயத்தை புத்தியில் நிலை நிறுத்துவது, அதை என்றும் மறவாமல் இருப்பது, கிரகித்ததைப் பிறருக்கு எடுத்துரைக்கும் ஆற்றல், அதையும் யுக்தி எனப்படும் தனிச் சிறப்போடு கூறுவது, அடுத்தவர் யுக்திகளை மறுப்பது, ஒருவர் பேசுவதன் பின்னணியில் உள்ள உண்மையைக் காண்பது, அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வது என்பன.
இந்த எட்டு லட்சணங்களும் அங்கதனிடம் முழுமையாக அமைந்திருந்ததை அனுமன் அறிந்து மகிழ்ந்தான் என்கிறார் வால்மீகி.
அங்கதன் தனது வானர சேனைகளுடன் சேர்ந்து சீதையைத் தேடும் முயற்சியில் பலன் ஏற்படாதது கண்டு, மனம் சோர்ந்து, கால விரயம் ஆவது பற்றிக் கவலை கொள்கிறான்.
கடலைத் தாண்டி இலங்கை செல்வது என்று முடிவு ஆனதும், அங்கதன் மீண்டும் உற்சாகமடைந்து ஒரு இளவரசன் என்கிற பொறுப்புடன் சேனைகளை நடத்திச் செல்கிறான்.
ஆனால், சமுத்திரத்தைத் தாண்டிச் செல்ல அனுமனால் மட்டுமே முடியும் என்று தீர்மானமாகி விட்டது. சீதையைக் கண்டு, அனுமன் திரும்பி வந்து ராமரிடம் கூறியதும், அடுத்து வானர சேனைகள் இலங்கை மீது படையெடுப்பு நடத்தவும், இலங்கை நோக்கி அணிவகுத்துச் செல்லவும் சமுத்திரத்தின் மீது சேது பாலம் கட்டப்பட்டது.
இலங்கையை அடைந்ததும் ராவணனுக்குத் தூது அனுப்ப அங்கதனையே தேர்ந்தெடுத்தார்கள். சீறிப் புறப்பட்டான் அங்கதன். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல, ராவணனை அவன் அரண்மனைக்கே சென்று நேருக்கு நேர் சந்தித்தான்.
வந்தவன் அங்கதன்; அவன் வாலியின் மைந்தன் என்று அறிந்தவுடன் ராவணன், அங்கதனைச் சிறைப் பிடிக்குமாறு ஆணையிட்டான்.
அது கேட்ட அங்கதன், புயலெனக் கிளம்பி, ராவணனின் புகழ் மிக்க மாளிகையின் விமான கோபுரத்தை இடித்துத் தகர்த்து விட்டு, வெளியேறித் தப்பினான்.
அங்கதன் தப்பிச் சென்ற சாகசத்தைக் கண்ட ராவணனுக்கு அப்போதே நம்பிக்கை தளர்ந்து விட்டது.
தூதுவனாக வந்த அங்கதனே இவ்வளவு தீரனாக இருந்தால், அவனை அனுப்பிய தலைவர்களான ராம லட்சுமணர்கள் இன்னும் எவ்வளவு அதீத ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும்! என்று எண்ணி, தனது எதிர்காலத் தோல்வியை அப்போதே மனக்கண்ணால் கண்டு விட்டான்.
இலங்கையுத்தத்தில் அங்கதன் நிகழ்த்திய வீர சாகஸங்கள் அதி உன்னதமானவை. இதனாலேயே ராம பட்டாபிஷேகத்தன்று, ராமர் அவனுக்குப் பல பரிசுகளை வழங்கினார்.
நவரத்தினங்கள் இழைத்த அங்கதங்களை (தோள்வளைகள்) அவனுக்குப் பரிசாக அளித்தார். பட்டாபிஷேகத்தின் போதும் ராமர் அருகில் அவன் உடைவாளோடு வீரம் மேலிட விளங்கி நின்றான்.
அதனாலேயே கம்பன், பட்டாபிஷேகக் காட்சியை சித்திரிக்கும்போது அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த என்று பாடி மகிழ்கிறார்.

Thanks to Indra Srinivasan for sharing this article.

0 comments:

Post a Comment