Sunday, April 6, 2014

“பழய சோறும், மாவடுவும்“ (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)


“பழய சோறும், மாவடுவும்“
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)

நம்பெருமாள் ஜீயர்புரம் எழுந்தருளுதல்



மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத்தானேயிருக்கும்!



இன்றைய திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது. எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாகயிருந்திருக்கலாம்.



அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன்.

பேரனின் திருநாமம் “ரங்கன்“. ஜீயர்புரம் என்னும் ஒரு சிறு கிராமம். காவிரிக்கரை ஓட்டி அமைந்துள்ள ஒரு அழகான இடம். அந்நாளில் என்றும் காவிரி வற்றாது ஓடிக் கொண்டிருந்த ஒரு காலம்.



பேரன் “சவரம் செய்துகொண்டு திரும்பி வந்துவிடுகிறேன்“ என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவனைக் காவிரி அள்ளிக் கொண்டு புரண்டோடினாள். அரங்கனது கடாக்ஷத்தினால் அவன் மீது மாறாத பக்திக் கொண்ட பேரனை ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபத்தின் அருகே கரை சேர்த்தாள் காவிரித்தாய்!.



நன்றி பெருக்குடன் நெக்குருக அரங்கனைத் தரிசித்தான் பேரன். பாட்டி தவிப்பாள் என்ற நினைவு வந்து அரங்கனிடத்து அவளுக்கும் சேர்த்து பிரார்த்திக்கின்றான்.



இங்கு ஜீயர்புரத்தின் காவிரிக்கரையில் பாட்டி பேரனைக் காணாமல் “ரங்கா..! ரங்கா..!“ என கதறிக் கொண்டிருக்கின்றாள்..



அப்போதுதான் சவரம் செய்த முகத்துடன் பேரனது ரங்கனுடைய உருவம் கொண்டு புன்சிரிப்போடு பாட்டிக்கு காட்சி தந்தான் இந்த மாயன்..!



தவித்துப்போன பாட்டி பதட்டம் தணிந்தாள். தனது இல்லம் திரும்பி பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் படைத்தாள்.



இதனிடையே காவிரி கொண்டு சென்ற அவளது அசல் பேரனும் இல்லம் திரும்ப, மாயன் ரங்கன் மாயமானான்.



அரங்கனது அன்பு கண்டு, பாடடிக்கு எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்று சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்த அவனது கருணைக் கண்டு

திருவரங்கம் நோக்கி வணங்கியது ஜீயர்புரம்..!



இந்த நெகிழ்வு மிக்க அரங்கனின் அன்பினைப் பாரோர் அறிந்து மகிழவும், இந்நிகழ்வு மறந்துவிடாமலிருக்கவும், இன்றும் அரங்கன் ஜீயர்புரம் எழுந்தருளி அங்கு கருணையுடன் அனைவரையும் கடாக்ஷிக்கின்றார்.



ஜீயர்புரத்தில் காவிரிக்கரையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முதல் மண்டகப்படி அங்குள்ள “சவரத் தொழிலாளர்களின்“ மண்டகப்படி.



ஒரு காலத்தில் கருட மண்டபத்தில் பெருமாள் இத்திருநாளின் 2ம் திருநாளன்று எழுந்தருளியிருக்கையில், மிராசு சவரத் தொழிலாளியினால் நம்பெருமாளுக்கு நேர் எதிரே கண்ணாடி காட்டப்பட்டு அங்கு கண்ணாடியில் தெரிகின்ற நம்பெருமாளின் பிரதிபிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று பின்பு அந்த சவரத் தொழிலாளி கௌரவிக்கபபட்டதாயும் இங்குள்ள நன்கு விஷயம் அறிந்த ஒரு பெரியவர் கூறுகின்றார். “எம்பெருமானார் வைபவத்தில்“ இந்நிகழ்வு உள்ளது என்கின்றார்.



இருந்திருக்கலாம்..! எவ்வளவோ நிகழ்வுகள் காலவெள்ளத்தில் கரைந்து போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம்.



ஆனால் இன்றும் பெருமாள் காவிரிக்கரைச் சென்று சேர்ந்ததும் அவருக்கு ஆகும் முதல் நிவேதனம் அன்று பேரன் ரங்கனாய் பெருமாள் பாட்டிக்குக் காட்சியளித்த போது படைத்தாளே “பழய சோறும் மாவடுவும்”. அதே போன்றுதான் இன்றளவும்..! - “பழய சோறும் மாவடுவும்"

0 comments:

Post a Comment